கதிர்காமத்தில் தங்கத்தால் கோயில் கட்டிய தமிழன்
பட்டிணத்தாரின்
வளர்ப்பு மகன் மருதப்பர்
ஈழத்திலே கதிர்காமத்தில்
தங்கத்தால் கோயில் கட்டியது
தமிழகத்தில் உள்ள அறுபடைவீடு கோயில்களுக்கு நிகரான திருத்தலமாக யாழ்ப்பாணத்தில் உள்ள கதிர்காமம் உள்ளது.
கதிர்காமத்தில் ஓடு வேயப்பட்ட கோயில்களே ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் இருந்ததாக அறியமுடிகிறது. ஆனால் பட்டிணத்தாரின் வளர்ப்பு மகனான மருதப்பர் ஈழத்திலே கதிர்காமத்தில் தங்கத்தால் கோயில் கட்டினார் என்று பட்டிணத்தாரின் வாழ்க்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கதிர்காமத்தில் இருந்து மருதப்பர் வாங்கி 500 கப்பல்களில் ஏற்றிக் கொண்டு வந்த எருவிராட்டிகளில் இருந்த தங்கமே இருந்தது. இது கண்டு மருதப்பரின் தந்தையாகிய பட்டிணத்தாரும், அவரது தாயாரும் மற்றும் பூம்புகாரில் வசித்த அனைத்து வணிகர்களும் வியந்து மலைத்துப் போயினர். பூம்புகாரில் வாழ்ந்த அனைத்துச் செல்வந்தர்களின் ஒட்டுமொத்த செல்வத்தை விட இது அதிகாக இருந்ததாம்.
கதிர்காமத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இங்கு கருவறைக்குள் என்ன உள்ளது என்று யாரும் அறியார். கர்ப்பக்கிரகத்தைத் திரையிட்டு மறைத்திருக்கிறார்கள். கர்ப்பக்கிருகத்தின் கதவைக்கூட அடியார்கள் பார்க்க இயலாது. பூசை செய்கிறவர்கள் அந்தத் திரையின் முன் நின்று தூபதீபம் காட்டுகிறார்கள்; அர்ச்சனை செய்கிறார்கள். வழிபடும் பக்தர்களும் அந்தத் திரையைத்தான் கண்டு வழிபடுகின்றனர். எந்தக் காலத்திலும் திரையை அகற்றுவதே இல்லை.
கர்ப்பக் கிருகத்துள் என்ன இருக்கிறது என்று யாரும் அறியார். கூரையின் மேல் மூன்று கலசங்கள் இருக்கின்றன. எனவே மூன்று மூர்த்திகளோ, மூன்று சக்கரங்களோ உள்ளே இருக்கின்றன என்று சொல்கின்றனர்.
பூசை செய்யும்போது வாயில் துணிணைக் கட்டிக் கொண்டு பூசை செய்கின்றனர். விபூதிப் பிரசாதம் கொடுக்கிறார்கள். பூசை செய்கிறவர்கள் சிங்களவர்கள், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். கப்புராளைமார் என்று அழைக்கப்படுகின்றனர்.
.... .... .... பட்டிணத்தாரின் வளர்ப்பு மகனான மருதப்பா என்கிற சிறுபிள்ளை அன்றூரு(500) கப்பல் முதலெல்லாம் கதிர்காமத்து சுப்பிரமணிய சுவாமிக்கும் ஈழத்திலே இரண்டு ஸ்தலம் கதிர்காமதிற்கே சுவர்னகோவில் கட்டிவைத்தும் உச்ச விக்கிரகங்களும் உண்டாக்கி வைத்தும், கும்பாபிஷேகம் பண்ணி வைத்தும், நித்திய உச்சவம் விசேஷ உச்சவமாக மாதஉச்சவம் சம்வச்சரோச்சவம் தான தருமங்கள் பண்ணும்படி திரவியம் வைத்தும் உபநயனம் கன்னிகாதானம் அன்னதா
பக்கம் 150 காவரிப்பட்டணம் சரித்திரம்
னம் பள்ளிக்கூடம் வந்து படிப்புச் சொல்லி வைத்து
பிள்ளை பெறுகிறவாளுக்கு இடம் வீடுகள் கட்டிவைத்தும் மனுஷர்கள் அமச்சல்[1] பண்ணி வைத்து, அதுக்கு வேண்டிய
சிலவு நடக்கும்படி கட்டளை[2] வைத்து மற்றவர்கள் குடிக்க தண்ணீர்க்கு
ஏரி வெட்டி வைத்தும், எறும்பு வளைகளுக்கு அரிசி மற்ற தானியங்கள் போடச் சொல்லியும்,
கட்டளையிட்டும், இப்படி அனேகம் தருமம் கட்டளை வைத்தும் அதுக்கு எல்லாம் திரவியம் முதல்
வைத்து[3] மிஞ்சின கொஞ்ச முதலை மாத்திரம்
வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது கூடவந்த கப்பல்காரர் எல்லாம் சரக்குகள் விற்று
திரவியம் ஆக்குவதில் சரக்குகளும் கொண்டு கப்பல்களுக்கு ஏத்தி பயணப்படச்செய்ய, இந்த
மருதப்பா என்கிறவரைப் பா(ர்)த்து நாங்கள் எல்லாரும் கரை[4] முகத்துக்குப் பயணமாச்சே, நீங்களும்
கப்பலுக்கு சரக்கு ஏற்றி பயணப்பட யில்லையா? என்று கேட்கச்சே, அப்போ
“அப்படியே வாறோம்” என்று கப்பலுக்கு பாரம்[5] ஏற்றுகிறதுக்கு கதிர்காமத்தில் உள்ள விராட்டிகள் எல்லாம் வாங்கி அன்னூரு(500) கப்பலுக்கும் பாரம் ஏத்திக் கொண்டு, கப்பல்களுடனே பாய் விரித்து ஆயிரம் கப்பலும் காவேரிக்கரை முகம் நாடிப் புறப்பட்டுச் சென்றார்.
....
[1] அமைச்சல்? = குடியேற்றம், அமைச்சு, துறைவாரியாகப் பிரித்து வேலைகளைச் செய்ய வைத்தல்,
[2] அறக்கட்டளை அமைத்து,
[3] மூலதனமாக வைத்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாய்ப் பணத்தைக் கொண்டு செலவு செய்தல்.
[4] கடற்கரை
[5] சுமை, எடை, பொருள்,
-------------------------------------------------------------------------------
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
அகரமுமாகி (பழமுதிர்சோலை)
சோலைமலை முருகா!
உலகமும் அடியேனும் வாழ, என் முன் விரைந்து வருக
தனதன தான தனதன தான
தனதன தான ...... தனதான
அகரமு மாகி யதிபனு மாகி
யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி
அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி
யினிமையு மாகி ...... வருவவோனே
இருநில மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி
திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அகரமும் ஆகி, அதிபனும் ஆகி,
அதிகமும் ஆகி, ...... அகம் ஆகி,
அயன் என ஆகி, அரி என ஆகி,
அரன் என ஆகி, ...... அவர்மேலாய்,
இகரமும் ஆகி, எவைகளும் ஆகி,
இனிமையும் ஆகி ...... வருவோனே!
இருநிலம் மீதில் எளியனும் வாழ
எனது முன் ஓடி ...... வரவேணும்.
மகபதி ஆகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் ...... வடிவோனே!
வனம் உறை வேடன் அருளிய பூஜை
மகிழ் கதிர்காமம் ...... உடையோனே!
செககண சேகு தகுதிமி தோதி
திமி என ஆடும் ...... மயிலோனே!
திரு மலிவான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு ...... பெருமாளே.
பொழிப்புரை
எழுத்துக்களில் முதலாவதான அகர எழுத்து ஆகியும், எல்லா உலகங்களும் தலைவனாகியும், எல்லாவற்றிற்கும் மேம்பட்டவர் ஆகியும், பரகதி ஆகியும், நான்முகன் ஆகியும், திருமால் ஆகியும், உருத்திரமூர்த்தி ஆகியும், அம்மூவருக்கும் மேம்பட்டவர் ஆகியும், அருகில் உள்ளவர் ஆகியும், எல்லாம் ஆனவர் ஆகியும், இனிமையாக விளங்குபவர் ஆகியும் வருபவரே!
நூறு அசுவமேத யாகங்கள் செய்து மகபதி என்ற பேர் பெற்றவனும், வலன் என்ற அசுரனைக் கொன்றவனும் ஆகிய தேவர் கோமான் (இந்திரன்) மிக்க மகிழ்ச்சி யடைகின்ற கட்டழகு உடையவரே!
காட்டில் வாழுகின்ற வேடன் செய்த வழிபாட்டை ஏற்று மகிழ்ந்து அருள் புரிந்து கதிர்காமம் என்ற திருத்தலத்தை உடையவரே! “செககண சேகு தகுதிமி தோதி திமி” என்ற தாள இசையுடன் ஆடுகின்ற மயிலை வாகனமாக உடையவரே!
செல்வம் மலிந்துள்ள பழமுதிர்ச்சோலை என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமை மிக உடையவரே!
பெரிய நிலவுலகில் எல்லோரும் ஈடேறவும் அடியேன் உய்வு பெறவும் என் முன் ஓடிவந்து ஆட்கொள்ள வேண்டும். -அருணகிரிநாதர்.



Comments
Post a Comment